நம்பிக்கை தும்பிக்கை
நம்பிக்கை தும்பிக்கை
மகந்தன்
என்பவன் மிகப்பெரிய வியாபாரி. நல்ல வழியிலும், கெட்ட
வழியிலுமாய் பணத்தைச் சம்பாதித்து கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தான். எப்படி சம்பாதித்தாலும், யாருக்காவது
தர்மம் செய்ய வேண்டும், கோயில்
காரியத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற
எண்ணமெல்லாம் அவனுக்கு அறவே கிடையாது. அதே
நேரம் தன் சுகத்துக்காக எக்கச்சக்கமாக
செலவிடுவான். வணிக விஷயமாக அடிக்கடி
வெளியூருக்கு தன் வண்டியில் செல்வான்.
செல்லும் வழியில் ஒரு பிள்ளையார்
கோயில் இருந்தது. அக்கோயிலில் தவறாமல் வழிபடுவான். பிரார்த்திக்கும்
போது, பிள்ளையாரே! நான் உனக்கு மாதம்தோறும்
நூறு தேங்காய் உடைக்கிறேன். ஆனால், எனக்கு நீ
மாதம் லட்சம் பொன் வருமானம்
வரச்செய்ய வேண்டும், என்று பேரம் பேசுவான்.
பிள்ளையார் இவனைக் கவனித்துக் கொண்டே
இருந்தார். அவனுக்கு புத்தி கற்பிக்க முடிவு
செய்தார். அந்த கோயில் வாசலில்
ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டு.
பிள்ளையாரே! எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ,
என் கை, கால்களை முடமாக்கி,
பிச்சை எடுக்க வைத்து விட்டாய்.
இதைக் கொண்டு மனைவி, பிள்ளைகளுக்கு
கொடுத்து, நானும் சாப்பிட போதவில்லையப்பா!
என் பாவங்களை மன்னித்து எனக்கு நல்வழி காட்டு,
என கண்ணீர் விட்டு பிரார்த்திப்பான்.
ஏழையின்
கண்ணீர் விநாயகரின் நெஞ்சைக் கரைத்தது. ஒருநாள் வியாபாரி கோயிலுக்கு
வந்தான். அப்போது அவன் காதில்
மட்டும விழும்படியாக ஒரு அசரிரீ குரல்
ஒலித்தது. நான் தான் பிள்ளையார்
பேசுகிறேன். அதோ, இருக்கிறானே, பிச்சைக்காரன்.
அவனுக்கு இன்று மாலைக்குள் ஒராயிரம்
பொற்காசு கிடைக்கப் போகிறது, என்றது அக்குரல். வியாபாரிக்கு
மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த பிச்சைக்காரனுக்கு கிடைக்கும்
பொற்காசுகள் அனைத்தையும் பறிக்க திட்டமிட்டான். வேகமாக
பிச்சைக்காரனிடம் போய், ஏனப்பா! உனக்கு
எல்லாரும் சாதாரண நாணயங்களைப் போடுகிறார்கள்.
நான் ஒரு தங்கக்காசு தருகிறேன்.
ஆனால், இன்று மாலை வரை
உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விட
வேண்டும், என்றான். பிச்சைக்காரனுக்கு சந்தோஷம். மாலை வரை பார்த்தாலும்,
ஒரு பிடி அரிசி வாங்கக்கூட
தேறாத அளவுக்கு சில்லறைகள் தான் இதில் விழும்.
இவனோ தங்கமே தருகிறேன் என்கிறான்.
ஆஹா...இதைக் கொண்டு ஒரு
மாதம் சுகமாக வாழலாம், என
கற்பனையில் ஆழ்ந்தான். மாலையும் நெருங்கியது. யாரும் பிச்சைக்காரன் தட்டில்
ஆயிரம் பொற்காசைப் போடவில்லை. அவனுக்கு கோபம் வந்து விட்டது.
பிள்ளையார்
அருகில் போனான். ஏ, பிள்ளையாரே!
பொய்யா சொல்கிறாய். என்னை ஏமாற்றி விட்டாயே,
எனக்கூறி அவர் முகத்தில் ஓங்கி
அடித்தான். பிள்ளையார் தன் தும்பிக்கையால் அவன்
கழுத்தை இறுக்கிப் பிடித்தார். இது மற்றவர்கள் கண்ணுக்கு
தெரியவில்லை. அவன் வலி தாளாமல்
அழுததைப் பார்த்து, வியாபாரி பக்தி முற்றி, தன்
கஷ்டத்தை அழுது கொண்டே பிள்ளையாரிடம்
சொல்வதாக நினைத்துக் கொண்டனர். பிள்ளையார் அவனிடம், நீ உடனே ஆயிரம்
பொன்னை அந்த பிச்சைக்காரனுக்கு கொடு.
இல்லாவிட்டால் உன்னை இப்படியே கொன்றுவிடுவேன்,
என்றார். மனமில்லாவிட்டாலும், உயிரைக் காப்பதற்காக, அவன்,
அங்கிருந்த பக்தர்கள் மூலம் தன் மனைவியை
பொற்காசுகளுடன் வரும்படி சொல்லி அனுப்பினான். அவளும்
காசுடன் வந்தாள். பிச்சைக்காரனுக்கு அதைப் போடும்படி சொன்னான்.
அவளும் போட்டாள். விநாயகர் பிடியை விட்டார்.
இறைவனிடம்
காசு பணம் கேட்டு பிரார்த்திப்பதில்
தவறில்லை. ஆனால், அது நம்
நியாயமான சுய உழைப்பாக இருக்க
வேண்டும். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி!
Comments
Post a Comment